}
உங்களை கொண்டு ஒருவர் நேர் வழி அடைவாராயின்,
அது இந்த உலகம் உலக வஸ்துக்களை விட மேலானது.

வாழ்வின் லட்சியம் இன்பம் மட்டும் அல்ல
நம்மையும் பிறரையும் நல்லோராக்குவதே.

June 06, 2010

ஆடம்பரத்தின் முடிவு அழிவு!



''(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர் ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.  - அல்குர்ஆன் 3;18

“எந்த ஊரையாவது நாம் அழிக்க நினைத்தால் சுகபோக வாழ்க்கை வாழும் அதன் மக்களுக்கு கட்டளைகள் அனுப்புகிறோம் அவர்கள் அதில் மாறுசெய்கிறார்கள் அவர்களுக்கெதிரான வார்த்தை மெய்ப்பிக்கப்பட்டுவிடுகிறது.  அதற்கு மேல அதை நாம் அடியோடு அழித்து விடுகிறோம்.                    - அல்குர்ஆன் 17 : 16

இறைவனின் இந்த திருவசனத்தை படிக்கும் போதெல்லாம் எத்தகைய பேருண்மை அதில் அடங்கியிருக்கிறது என்பதை நாம் உணரலாம்.

உலகெங்கும் பரந்துகிடக்கிற சமுதாயத்தினரின் வாழ்க்கையை உன்னிப்பாக ஆராய்ந்து பார்க்கின்ற போது இறையச்சத்தை மறந்து இம்மையின் தற்கால சுகபோகங்களில் சிக்கி வாழ்க்கைப் பாதையில் நடந்தவர்களெல்லாம் பரிதாபத்துக்குரியவர்களாக வாழ்ந்து மடிந்ததை வரலாறு படம்பிடித்துக் காட்டுகிறது.

இஸ்லாத்தின் ஆரம்பகாலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையையும் நான்கு கலிபாக்களின் வாழ்க்கைகளையும் படிக்கின்றபோதெல்லாம் இலட்சியத்திற்காக இறையச்சத்துடன்.  எளிமையுடன் அவர்கள் வாழ்ந்த முறைகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றன.  ஏத்தகைய கட்டுப்பாடுமின்றி எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற அளவுக்கு அவர்களின் பதவிகள் இருந்தாலும் ஆடம்பர வாழ்வு முறைகள் அவர்களை அணுக அஞ்சின.


வறுமையில் வாடுபவர்களும், ஏழைகளும் வேறுவழியின்றி அவசியத்தின் காரணமாக எளிமையுடன் வாழ வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள்.  நல்ல வசதிகளும், வாய்ப்புகளும், அதிகாரபலமும் இருப்பவர்கள் தான் எளிமையான வாழ்க்கைக்கு தங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

யாரும் பெறமுடியாத இணையற்ற பதவியடைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மண்சுவர்களைக் கொண்ட சிறிய வீட்டில் வாழ்ந்தார்கள்! கயிற்றுக்கட்டிலும், தண்ணீர்வைக்கும் தோல் பையும் தான் அவர்கள் இல்லத்தில் காணப்பட்டன.  அவர்கள் தம் அருமை புதல்வியார் பாத்திமா நாயகம் அவர்களை திருமணம் செய்து கொடுத்த போது சீதனமாகக் கொடுத்த பொருள்களை கைக்கூலி வாங்கும் கோழைகள் கவனத்தில் கொள்ள வேண்டும்..

பணம் வருகின்ற போது நற்குணம் மேலோங்கிச் செல்ல வேண்டும்.  அதிகாரம் கிடைக்கின்ற போது பணிவை மேற்கொள்ள வளர்பிறை வேண்டும், ஆடம்பரம் நம்மை அழிவுப்பாதையில் தள்ளி விடும் என்ற பயம் எப்போதும் இருக்க வேண்டும் பண ஆசை வெறித் தாண்டவம் ஆட ஆரம்பித்துவிட்டால் உயர்வும், பெருந்தன்மையும் மலர்வதற்கு வழியே இல்லை.


எல்லோரும் நம்மைப் புகழ வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை.  ஆனால் அந்தப்புகழ்ச்சி நம்முடைய மார்க்க அறிவுக்காகவும், செயல் திறனுக்காகவும், சேவை உணர்ச்சிக்காகவும் இருக்க வேண்டும், நமது ஆடம்பரவ வாழ்க்கை முறைகளை, சுகபோகங்களைக் கண்டு நம்மைப் பலர் புகழ வேண்டும் என நினைப்போமேயானால் அந்த வாழ்வு நிலைக்காது.  அத்தகைய சுக போக வாழ்க்கையை மேற்கொள்ளும மக்களைத்தான் இறைவன் எச்சரிக்கிறான். அந்த எச்சரிக்கைகளைக் கண்டும் திருந்தாதவர்களை அல்குர் ஆனில் அவன் அறிவித்திருப்பது போல அவர்களை அழித்து விடுகிறான்.  இதை மனதில் நிறுத்தி நம்முடைய பண பலமோ, அதிகார பலமோ வேறு எந்த சக்தியோ நம்மை அடிமைப்படுத்த விடாமல் இறையச்சத்தோடு எந்நாளும் வாழ நம் மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்,

“அல்லாஹ்வின் உடையதான நேர்வழியிலல்லாமல் தன் சரீர இச்சையைப் பின்பற்றுபவனைக் காட்டிலும் வழிகெட்டவன் எவனும் உண்டோ?
-(அல்குர்ஆன் 28:50)

சரீர இச்சைக்குப் பலியாகாமல் இறையச்சத்தில் நெறியுடன் வாழ அல்லாஹ் அருள்புரிவானாக!

நன்றி.அல்ஹாஜ் ஏ.எம்.சயீத்

0 comments:

Post a Comment

About Me

My photo
T.keeranur, Tamilnadu,, India
back to top